கார்த்தி கார் தாக்குதல் வழக்கு: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்
மானாமதுரை: உள்துறை அமைச்சரும், சிவகங்கை தொகுதி எம்.பியுமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட்டபோது அக்கட்சி தரப்பு வாக்களார்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில்12-5-2009 அன்று இரவு, மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு ப.சிதம்பரத்தின் மகன் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரத்தின் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் கார்த்தி சிதம்பரத்தின் கார் டிரைவர் சரவணன் காயமடைந்தார். மேலும் உடன் வந்த மூன்று கார்கள் சேதமடைந்தன. அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அதிமுக எம்எல்ஏ குணசேகரன், முன்னாள் எம்.பி, அன்பழகன், ஊராட்சி தலைவர் தனபாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் குருமுருகானந்தம் மற்றும் 11 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மானாமதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரனை இன்று ஆஜராகுமாறு மானாமதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications