மதுரை அருகே அரசுப் பேருந்தில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் மேலூரை அருகே உள்ள திருவாதவூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை போலீசார் சாதரணமாக சோதனை செய்தபோது டிபன் பாக்ஸ் போல இருந்த மர்ம பார்சலை கண்டு பிடித்தனர்.
அதனை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குண்டு முத்தம்பட்டி கண்மாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சமீபத்தில்தான் அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பேருந்தில் துப்பாக்கி குண்டுகள்
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பேருந்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் அனாதையாக கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கிகள் மற்றும் பைகளை மீட்டு திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.
போதையில் விட்டுச்சென்ற ராணுவ வீரர்
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கிகள் கன்னியாகுமரி மாவட்டம் அகதீஸ்வரம் அருகே இலத்தையாடிவிளை பகுதியை சேர்ந்த லிங்கேஷன் (வயது41) என்பவருக்குரியதும், ராணுவத்தில் 15 வருடங்கள் பணியாற்றி விட்டு கடந்த ஜுலை மாதத்தில் அவர் விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. மேலும் 2 துப்பாக்கிகளுக்கும் அவர் ராணுவத்தில் லைசென்ஸ் பெற்றிருந்ததும் தெரிந்தது. இதனையடுத்து லிங்கேஷனின் மனைவி அகிலாவை தொடர்பு கொண்ட போலீசார் துப்பாக்கிகளை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து திருச்சி வந்த லிங்கேசன் திருச்சி புறப்பட்டு வந்து துப்பாக்கியை கேட்டுள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், லிங்கேசனை எச்சரித்து துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். பாபர் மசூதி தினத்தன்று துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது












Click it and Unblock the Notifications