சபரிமலைக்கு பதில் உத்தமபாளையம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை முடிக்கும் பக்தர்கள்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் சண்முகாநதி கரையோரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. அங்கு இருமுடி செலுத்தி விரதத்தை முடிக்க ஆரம்பித்துள்ளனர் பக்தர்கள்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்தொடர்பாக விஷமத்துடன் போராடி வரும் கேரளாக்காரர்கள் சபரிமலை பக்தர்களையும் விடவில்லை. அவர்களைத் தாக்குவது, வேன்களைத் தாக்குவது, பணம் பறிப்பது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குமுளி வழியாக கேரளாவுக்குப் போக முடியவில்லை.
மாற்றுப் பாதையில் செல்ல பெரும் பொருட் செலவு ஆகும் என்பதால் பல பக்தர்கள் தற்போது மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளனர். உத்தமபாளையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அவர்கள் படையெடுக்கின்றனர். பழமையான இந்தக் கோவிலுக்குச் சென்று விரதத்தை முடித்து, இருமுடி செலுத்தி ஊர்களுக்குக் கிளம்பிச் செல்கின்றனர்.
இதை சண்முகா நதியாகப் பார்க்கவில்லை பம்பை நதியாக நினைத்து எங்களது இரு முடியைக் காணிக்கை செலுத்தி விரதத்தை முடித்தோம் என்று அவர்கள் கூறினார்கள்.
தமிழர்களுக்குத் தொடர்ந்து கேரளாவில் பாதுகாப்பு குறைந்து வந்தால் எதிர்காலத்தில் இந்த உத்தமபாளையம் ஐயப்பன் கோவில் பிரபலமாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பெருமளவிலான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு தற்போது வரத் தொடங்கியுள்ளனர்.