கேரளாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ரவுடிகள்- கத்தியைக் காட்டி மிரட்டினர்: தமிழக பக்தர்கள்
செங்கோட்டை: கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்களை ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்வீசித் தாக்கியும், அடித்தும் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து தப்பி மீண்டு தமிழகம் திரும்பிய பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு கம்பம், நாகர்கோவில் செங்கோட்டை, போன்ற பல சாலை மார்க்கங்கள் உள்ளன. கோவை மாவட்ட மக்கள் பாலக்காடு வழியாகவும் சென்று வருகினர். ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செலவது வழக்கம். இதனால் இப்பகுதி ரோடுகளில் இரவும் பகலும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
செங்கோட்டை சாலை பிஸி
தற்போது முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் கம்பம், குமுளி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஏற்கனவே இந்த வழியாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் தினந்தோறும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் ஐய்யப்ப பக்தர்களின் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனிடையே சபரிமலைக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களை கேரளாவைச்சேர்ந்த ரவுடிகள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் உயிர் தப்பிய பக்தர்கள் ஐயப்பனின் அருளினால் தப்பியதாக கூறியுள்ளனர். சென்னையை சேர்ந்த துரைபாபு தலைமையில் காரில் சபரிமலை சென்று திரும்பிய பக்தர்கள் கூறியதாவது,
தேனி அருகே எங்களது காரை நிறுத்திய கேரள ரவுடிகள் கத்தியை காட்டி கொலை மிரட்டல்கள் விடுத்தனர். காரின் பின் பக்க கண்ணாடியை உடைத்தனர். எங்கள் காருக்கு முன்னாள் சென்ற சென்னை அம்பத்தூர் பகுதி பக்தர்கள் சென்ற வேனின் கண்ணாடியை உடைத்தனர். டிரைவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த நாங்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என காரை திருப்பி செங்கோட்டை வழியாக அய்யபன் கோவில் சென்று சென்னை திரும்புகிறோம் என்றனர். இதேபோல் வேலூரில் இருந்து சென்று வந்த பக்தர்கள் கூறியதாவது:
பயண நேரம் காலவிரயம்
பல ஆண்டுகளாக வேலூரில் இருந்து தேனி, குமுளி வழியாக சபரி்மலைக்கு சென்று வருகிறோம். இந்த ஆண்டு கம்பம் பகுதியை ஓட்டியுள்ள தமிழக-கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பதற்றம் நிலவுவதால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 200 முதல் 300 கிமீ கூடுதலாக பயணம் செய்ய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கால விரயம் ஏற்படுவதோடு பெட்ரோல் எரிபொருள் செலவும் கூடுதலாகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications