அணை: மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்- பாஜக

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டிவிடும், கேரள அரசை டிஸ்மிஸ் செய்யாவிட்டால், மத்திய காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை பூதாகரமாக்கி தமிழர்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் கேரள காங்கிரஸ் அரசு நடந்து கொள்கிறது. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட அந்த மாநில கட்சியினர், இரு மாநில மக்களை மோதவிடும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சனை குறித்து பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் திருமலைசாமி, பொதுச் செயலர்கள் சுப. நாகராஜன், எஸ்.ஆர். சரவணபெருமாள் செயலர்கள் சுரேந்திரன், பழனிவேல்சாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளனர்.

வன்முறை சம்பவங்கள் பற்றி அந்த அறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால் கேரள அரசும், அந்த மாநில போலீசாரும் பிரச்சனைக்கு துணை நின்றுள்ளது தெரிகிறது.

போடி, தேனி மாவட்டங்களிலிருந்து கூலி வேலை செய்யச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் நடந்து வருகின்றன. இதனால் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் பிரதமர் நேரடியாக தலையிடாதது வருத்தமளிக்கிறது. கேரள போலீஸை நம்பி அணையை விடமுடியாது. மத்திய படையைக் கொண்டு அணைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேவைப்பட்டால் ராணுவத்தையும் அழைக்க வேண்டும்.

வாஜ்பாய் அரசு காலத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய நதி நீர் இணைப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மாநிலங்களின் தேவைக்கேற்ப, நதி நீரினை பகிர்ந்து வழங்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்.

எல்லைப்பகுதி தமிழர்களின் உயிர், உடைமைகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு. எல்லைப் பகுதியில் தமிழர்களின் உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். ஆனால், தேனி மாவட்டத்திற்கு எஸ்.பி. கூட நியமிக்கப்படவில்லை, திண்டுக்கல் எஸ்.பி.தான் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். உடனடியாக எஸ்.பியை நியமிக்க வேண்டும்.

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் கூட தாக்கப்படுகிறார்கள், தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களும் தாக்கப்படுகிறார்கள். மாபெரும் மதக் கலவரத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக சந்தேகம் உள்ளது. பக்தர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகள் ஏற்படும்.

மத்திய அரசு, கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய தவறினால், திமுக மத்திய அரசுக்கான தனது ஆதரவை தமிழர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும். நியாயம், தர்மம் நம் பக்கம் உள்ளதால் அதை செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

முல்லை பெரியாறுக்கு 999 ஆண்டுகள் ஒப்பந்தம் உள்ளது. அதுவரை கேரளத்துக்கு எந்த உரிமையும் இல்லை. இதில் அனைத்து தமிழகக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு, பாலாற்றில் அணை கட்டும் பிரச்சனைகளை, அந்ததந்த மாநில அரசுகளே ஏற்படுத்துகின்றன. ஆனால், மத்திய அரசு ஆட்சியைக் காப்பாற்ற, அவர்களை தட்டிக்கேட்க வக்கற்றுள்ளது. பலவீனமான பிரதமர் உள்ளவரை எதுவும் நடக்காது.

நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட, தமிழகத்தின் அனைத்து எம்.பிக்களும் சேர்ந்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். தெலுங்கானா பிரச்சனைக்கு காங்கிரஸ் எம்.பிக்களும் கூட குரல் கொடுக்கிறார்கள். அதுபோல் இங்குள்ள காங்கிரஸாரும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக போராட வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+