தூத்துக்குடியில் கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பலியான கொத்தனார் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (53). கொத்தனராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நெல்லையில் அரசு பேருந்து அவர் மீது மோதியதில் பலியானார். இது குறித்து அவரது மனைவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு எதிராக இழப்பீட்டு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேருந்து மோதி பலியான முருகேசன் குடும்பத்துக்கு ரூ.3,23,000 இழப்பீட்டு தொகையை, ஏழரை சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவு தொகையை சேர்த்து மொத்தம் ரூ.4,32,000யாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் முருகேசனின் மனைவி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பிரபுதாஸ் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்ற அமினா நடராஜன் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். தமிழக போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றது முதல் அரசு பேருந்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications