ஒரு வாரத்தில் எல்லையில் இயல்பு நிலை திரும்பும்- தமிழக, கேரள காவல் அதிகாரிகள்
கம்பம்: தமிழக, கேரள எல்லைப் பகுதியில், இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குமுளியில் நேற்று நடந்த தமிழக, கேரள காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இரு மாநில எல்லைப் பகுதிகளில் நிலவும் பதட்ட நிலையை தணிப்பது தொடர்பாக நேற்று மாலை குமுளியில் இரு மாநில காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்குமார் மற்றும் ஈஸ்வரன், இடுக்கி எஸ்.பி. ஜான் வர்கீஸ, டிஎஸ்பிக்கள் விஜயன், ஜிஜி மோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் பிரவீன்குமார் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கடந்த 4 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இருமாநில மக்களுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரள மாநிலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் செல்லவில்லை. அதேபோல் தமிழகத்துக்கும் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த நிலை மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இருமாநில எல்லைப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
இதற்கிடையே கம்பம் உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதி காணப்படுகிறது. எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறவில்லை. இருப்பினும் அசாதாரணமான நிலை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications