வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது: கி.வீரமணி
சென்னை: வெளிநாட்டு வாணிப நிலையங்களை எதிர்ப்பது போல, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களையும் இந்தியாவில் நுழைய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் வருவதால் இந்தியாவில் கற்போரின் கல்வித் தரம் உயரும் என்ற ஒரு போலியான, உண்மைக்கு மாறான வாதத்தைக் கொண்டு வர முயற்சி செய்வோரின் கூற்றை ஆராய வேண்டும்.
இந்தியாவில் வர விரும்பும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், கல்வியில் முத்திரை பதித்த, புகழ் வாய்ந்த ஹார்வர்டு, ஆக்ஸ்போர்ட், ஸ்பன்போர்ட், கேம்பிரிட்ஜ் என்ற மாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் போன்ற பல்கலைக் கழகங்களோ, கல்வி நிறுவனங்களோ அல்ல.
அங்கேயே மாணவர்கள் ஈர்க்க முடியாத, அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், சிக்கலினால் மூடப்படும் நிலையில் உள்ள மிகச் சாதாரண பல்கலைக் கழகங்கள் தான். வெளிநாட்டுகளில் சந்தையை தேடும் வாணிப நிலையங்கள் போல இந்தியாவுக்கு வர உள்ளன.
எனவே வெளிநாட்டு வாணிப நிலையங்களை எதிர்க்கும் நிறுவனங்கள், அமைப்புகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் இந்தியாவுக்குள் நுழைய விடுவதையும் முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications