நாளை திமுக உண்ணாவிரதம்-ஸ்டாலின் தலைமையில் தாம்பரத்தில் போராட்டம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கேரள அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தாம்பரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து சமீபத்தில் கூடி விவாதித்த திமுக செயற்குழுவில், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும்.
சென்னையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
அன்பழகன் உண்ணாவிரதத்தை மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி முடித்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து 15ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications