15ம் தேதி சட்டசபை கூட்டம் எதிரொலி-14ம் தேதியே திமுக மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 15ம் தேதி நடைபெறும் என திடீரென முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதால், திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் 14ம் தேதியே நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது கோரிக்கைகளான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை, இந்த பிரச்சினையிலே ஒரு முடிவு ஏற்படும் வரையில், மத்திய பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலே விட வேண்டும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கேரள அரசுக்கு உத்தரவிட்டதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவைகளை வலியுறுத்தியும், 12-12-2011 அன்று மாநகரங்களிலும், நகரங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பதென்றும்,
அதற்கடுத்து 15-12-2011 அன்று முல்லைப் பெரியாறு அணையினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் மாபெரும் மனித சங்கிலி' அணிவகுப்பு நடத்துவதென்றும் 9-12-2011 அன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திடீரென்று தமிழக சட்டமன்ற கூட்டம் 15-12-2011 அன்று ஏற்பாடு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வந்துள்ள காரணத்தால், 15-12-2011 அன்று தி.மு.க. சார்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி' அணிவகுப்பை, அதற்கு முதல் நாள் 14-12-2011 அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைவர்களின் தலைமையில் நடத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.