அணுமின்நிலைய பிரச்சினையை மறைக்கவே அணைப் பிரச்சினையை மத்திய அரசு கிளப்பியது -சீமான் குற்றச்சாட்டு
கும்பகோணம்: கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டத்தை திசை திருப்பவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மத்திய அரசு தூண்டிவிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி டிசம்பர் 17ல் தேனியை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சீமான் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அணை பலமாக உள்ளதாலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் சுயலாபத்துக்காக முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை கிளப்பி உள்ளனர். கேரள அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரையும் தர மறுக்கிறது.
தமிழர்களின் உரிமை
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணை தமிழர்களால் தமிழ்நாட்டுக்காக கட்டப்பட்டது ஆகும். ஆனால் கேரள அரசு நமது உரிமையில் தலையிட்டு அதுவும் உரிமை கொண்டாடுகிறது. கேரள அரசு புதிதாக அணை கட்ட வேண்டும் என்றால் இப்போது உள்ள அணைக்கு உள்பக்கமாக கட்டிக் கொள்ளலாம் வெளிப்பக்கமாக அல்ல.
போராட்டத்தை திசை திருப்புகிறது
ராஜபக்சே போர்குற்றவாளி என்று தமிழகத்தில் அனைவரும் கூறி வந்தனர். மேலும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது மத்திய அரசு கூடங்குளம் பிரச்சினையை ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது. தற்போது கூடங்குளம் பிரச்சினை பூதாகரமனதாக மாறியவுடன் முல்லைபெரியாறு அணை பிரச்சினையை கிளறிவிட்டு கூடங்குளம் பிரச்சினையை திசை திருப்புகிறது.
காங்கிரஸ் ஆட்சி
மத்தியிலும், கேரள மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்வதால் அவர்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். முல்லைபெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணவும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும் வருகிற 17-ந்தேதி ஆண்டிப்பட்டியில் இருந்து தேனிக்கு பேரணியாக செல்ல உள்ளோம் என்றார் அவர்.