சர்தாரிக்காவது, வாதமாவது- அவர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்? பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பக்கவாதம் எல்லாம் இல்லை என்றும், அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார். சர்தாரி பதவி விலகப் போவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு லேசான மாரடைப்பும், பக்கவாதமும், முகவாதமும் ஏற்பட்டதால் தான் அவர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார் என்றும், உடல் நிலை காரணமாக அவர் பதவி விலகக்கூடும் என்றும் தகவல் வந்தன. இதை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் ராணுவம் சர்தாரியை பதவியை விட்டுத் தூக்க சதித் திட்டம் எதுவும் தீட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கிலானி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
சர்தாரி இதய நோய்க்கு சிகிச்சை பெறவே துபாய் சென்றார். அவரது உடல் நலம் தேறி வருகிறது. அவர் 2 வாரம் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு நாடு திரும்புவார்.
சர்தாரி ராஜினாமா கடிதம் எழுதவில்லை. அவர் எதற்காக ராஜினாமா கடிதம் எழுத வேண்டும்? அவருக்கு தான் நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவு உள்ளது. ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக வந்த செய்திகள் வெறும் வதந்திகள் தான் என்றார் கிலானி.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் ராணுவம் தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகவும், தனக்கு உதவ வேண்டும் என்று கோரி சர்தாரி அமெரிக்க உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பிரச்சனையாகிவிட்டது. இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவிருந்தார். ஆனால் அதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு துபாய் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications