கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,000 ஆதார விலை வேண்டும்:அரசுக்கு வைகோ கோரிக்கை
சென்னை: தமிழக அரசு கரும்பு டன்னுக்கு ரூ.3,000 விலை நிர்ணயிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், தமிழக அரசு இதுவரை கரும்பு விலை நிர்ணயம் செய்யாததால் கரும்பு விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சர்க்கரை ஆலைகள் பல வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. கரும்புக் கழிவு கூட டன்னுக்கு ரூ.3,600க்கு ஆலைகளால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கரும்பை விளைவிக்கும் விவசாயிகள் உரிய விலையின்றித் தவிக்கின்றனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி உர விலை உயர்வு, இடுபொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறும் கரும்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையில் கரும்பு டன்னுக்கு ரூ. 3,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications