தமிழக மக்களின் போராட்டங்களை அரசு ஒடுக்கக்கூடாது: ராமதாஸ்
சென்னை: முல்லைப் பெரியாற்று அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு அடாவடிப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. தமிழக மக்களின் அமைதிப் போராட்டங்களை அரசு ஒடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாற்று அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு அடாவடிப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கேரள அரசின் இப்போக்கை எதிர்த்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பேரணி நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
முல்லைப் பெரியாற்று தண்ணீரையே தங்களின் வாழ்வாதாரத்திற்கான வழியாகக் கொண்டுள்ள மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் உரிமை பறிபோவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் கடந்த சில வாரங்களாக மறியல் போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக அவர்கள் அமைதி வழியில் கேரளத்தை நோக்கி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்காமலேயே, சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒவ்வொரு நாளும் 80,000 முதல் 1 லட்சம் பேர் என்ற அளவிற்கு மக்கள் திரளுவதிலிருந்தே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். கேரள எல்லைக்குள் நுழையப் போவதாக அவர்கள் அறிவித்திருந்த போதிலும், தமிழக அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று தமிழக எல்லையான குமுளியுடன் தங்களது பேரணியை முடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நோக்கம் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுதானே தவிர வன்முறையில் ஈடுபடுவது அல்ல. அவ்வாறு இருக்கும் போது நேற்று கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு பகுதிக்கு பேரணியாக சென்று கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தியுள்ளனர். பெண்கள் மீதும் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்குப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர்தான் இந்த தடியடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரை உடனடியாக அப்பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கம்பம் நகரில் நேற்று 10,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
உரிமைகள் பறிக்கப்படும் போது அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான எல்லா உரிமையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டு. முல்லைப் பெரியாற்று நீரில் தங்களின் உரிமை பறிபோவதை தாங்கிக் கொள்ளமுடியாமல் தான் தேனி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதி வழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்த வேண்டுமே தவிர ஒடுக்க முயலக்கூடாது. பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்படுவதற்கு காரணமான கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் அமைதி போராட்டத்திற்கு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications