சேலம் தேமுதிக எம்எல்ஏ, மனைவி மீது நில அபகரிப்பு புகார்-போலீஸ் வழக்குப் பதிவு
சேலம்: சேலத்தில் தேமுதிக எம்எல்ஏ ஆர்.மோகன்ராஜ் மீதும், அவரது மனைவி மீதும் நிலஅபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.மோகன்ராஜ். சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளராகவும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர் மீது பெரமனூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (63) பேர்லேண்ட்ஸ் போலீசாரிடம் நிலஅபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில் ராஜமாணிக்கம் கூறியிருப்பதாவது,
நான் டேங்கர் லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறேன். கடந்த 2005ல் அழகாபுரத்தை அடுத்த ஸ்ரீராம் நகரில் எம்எல்ஏ மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள இடத்தை வாங்கினேன். அதன்பிறகு எனது 1,200 சதுர அடி நிலத்தை மோகன்ராஜூம், அவரது மனைவி உண்ணாமலை உள்ளிட்டோர் ஆக்கிரமித்து கொண்டனர்.
எனது நிலத்தை அபகரிப்பதற்காக சுற்றுசுவரை இடித்து தள்ளினர். மோகன்ராஜ் ஆக்கிரமித்த நிலத்தை திரும்ப கேட்டதற்கு, கூலிப் படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். நில அபகரிப்பு குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனுவை பெற்று கொண்ட பேர்லேண்டஸ் போலீசார், ஆர்.மோகன்ராஜ் மீதும், அவரது மனைவி உண்ணாமலை மீதும் 448 (அத்துமீறி நுழைதல்), 427 (சுற்றுசுவரை இடித்து தள்ளி ஆபாச வார்த்தைகளால் திட்டுதல்), 506(2) கொலை மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications