பழனியில் கார்கள் மோதல்- ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் பலி
பழனி: பழனி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் நீதிமணி(52). இவர் மதுரைக்கு தனது காரில் சென்றார். காரை டிரைவர் முகமது இப்ராகீம் (55) என்பவர் ஓட்டினார்.
கடலூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் ஒரு காரில் சபரிமலைக்கு சென்று விட்டு பழனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். பழனி - திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள கணக்கன்பட்டியை அடுத்த தாய்மூகாம்பிகை கோவில் அருகே வந்த போது, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை ஐய்யப்ப பக்தர்கள் வந்த கார் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது பழனியில் இருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த டாக்டர் நீதிமணி கார் மீது எதிர்பாராத விதமாக ஐய்யப்ப பக்தர்களின் கார் பயங்கரமாக மோதியது. இதில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் டாக்டர் நீதிமணி, டிரைவர் முகமது இப்ராகீம், ஐய்யப்ப பக்தரான கடலூர் மாவட்டம் கீழ்பருத்திக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் ஐய்யப்ப பக்தர்களின் காரை ஓட்டி வந்த அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் சிவக்குமார், சபரிராஜன், அருள்முருகன், சம்பத்குமார், குமார், ரஜினிகாந்த், நரேந்திரன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications