பள்ளி ஆசிரியை குளிப்பதை படம் பிடித்த கல்லூரி மாணவர்- 3 பேர் கைது
நெல்லை: நெல்லையில் பள்ளி ஆசிரியை உட்பட அவரது குடும்பத்தினர் குளிக்கும் காட்சிகளை செல்போன் மூலம் ரகசியமாக படம் பிடித்த கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கீதாவின் கணவர் வீட்டில் உள்ள குளியறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியறை ஜன்னல் தடுப்புகளுக்கு இடையே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கவனித்தார்.
தடுப்புகளை நீக்கி பார்த்தபோது, அதன் இடையே ஒரு செல்போன் வைக்கப்பட்டு இருந்தது. அந்த செல்போனை எடுத்து அதில் உள்ள மெம்மரி கார்டை கம்ப்யூட்டரில் போட்டு பரிசோதித்து பார்த்தார். அதில் தனது மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து நெல்லை சரக போலீஸ் டிஐஜி வரதராஜுவிடம் புகார் செய்தார். டிஐஜியின் உத்தரவின் பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் கீதாவின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த செல்போன், அவரது எதிர் வீட்டில் வசித்து வரும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முத்துவிஜய்க்கு(18) சொந்தமானது என்று தெரிய வந்தது.
மேலும் முத்துவிஜய் அவரது நண்பர்களான திசையன்விளையைச் சேர்ந்த சுதாகர்(18), அமுதன்(22) உள்ளிட்டோர் உடன் சேர்ந்து கீதா வீ்ட்டு குளியறையில் செல்போன் வைத்து குளியல் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து முத்துவிஜய், சுதாகர், அமுதன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.