முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசுக்கு திமுக துணை நிற்கும்-ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக பொதுச்செயலாளர் மு.க ஸ்டாலின் அரசுக்கு ஆதரவாக பேசினார். சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசியதாவது:
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் நலன்களை குறிப்பாக, தென் மாவட்டங்களிலே உள்ள லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்திற்காகச் சார்ந்து இருக்கும் நிலையினையும்-பாதுகாத்திடும் நோக்கில், அரசினர் கொண்டு வரும் எத்தகைய தீர்மானத்தையும், மனப்பூர்வமாக ஆதரித்து வலுசேர்த்திட, திமுகவும் தலைவர் கலைஞரும் என்றைக்குமே தயார் என்பதை எடுத்த எடுப்பிலேயே அறிவித்திட விரும்புகிறேன்.
கேரளாவின் உள்நோக்கம்:
கேரள அரசு 1976ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கட்டியது. இந்த இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணையை விட மூன்றரை மடங்கு பெரியது. அணையின் கொள்ளளவோ, முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட ஏழு மடங்கு அதிகம். இடுக்கி அணை நீர்ப்பாசன அணை அல்ல. புனல் மின்சாரம் தயாரித்திடவென்றே கட்டப்பட்டதாகும். ஆனால் அதற்குத் தண்ணீர், முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வரவேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைத்தால்தான், இடுக்கி அணைக்குத் தண்ணீர் வரும். இதையும் மனதிலே கொண்டுதான், உள்நோக்கத்தோடு, கேரள அரசு தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பூகம்பப் பொய்யுரைகளைப் பரப்பி வருகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு:
முல்லைப் பெரியாறு பிரச்சனையில், நியாயமான உரிய தீர்வு காண, கலைஞர் தலைமையில் இருந்த தமிழக அரசு, 1998 டிசம்பரில், இந்திய உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்திய உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை வழக்கில் 27.2.2006 அன்று அளித்த தீர்ப்பில், அணை பலம் இழந்து விட்டது என்ற கேரளாவின் கூற்றுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும், தமிழ்நாடு 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை செய்து முடித்தவுடன், உச்சமட்ட அளவான 152 அடி வரையில் தமிழ்நாடு நீரைத் தேக்கி வைக்கலாம் என்றும் உத்தரவுகள் வழங்கியது.
இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசியல் சட்ட நியாயங்களின்படி நிறைவேற்றாமல், கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றி, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டத்தை தன்னிச்சையாக 136 அடி என நிர்ணயித்துக் கொண்டது.
மத்திய பாதுகாப்பு படை:
இதை சுட்டிக்காட்டி தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஒரு கட்டமாகத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ்.ஆனந்தின் தலைமையில் அதிகாரம் படைத்த குழு ஒன்றை நியமித்தது.
கேரள அரசும், தமிழக அரசும் இடம் பெற்றுள்ள இந்த குழு ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டதோடு, மீண்டும் பார்வையிட்டு விரைவில் அறிக்கை அளித்திட உள்ளது. இந்த நிலையிலேதான் கேரளாவிலே உள்ளவர்கள், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து, பூகம்பம், சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு, பேரழிவு, என்றெல்லாம் இட்டுக்கட்டிய, கற்பனையான அச்சுறுத்தல்களையும் பொய் பரப்புரைகளையும், வதந்திகளையும் வேகமாக உலவவிட்டு இரு மாநிலங்களுக்கிடையே விபரீதத்தையும், வேதனைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
கேரளாவில் பொல்லாத இந்தப் போக்கைத் தட்டிக் கேட்கவும் இந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு ஏற்படும் வரையில் முல்லைபெரியாறு அணைப் பகுதியை மத்திய பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் விடவேண்டும்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, அணையின் நீர் மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். அண்ணா வழி, அறவழி, அமைதி வழி உருவாகிடவும் உரிமையாகக் கிடைத்திட வேண்டிய தண்ணீருக்காக உதிரம் சிந்திடும் வன்முறை தவிர்த்து நன்முறை திரும்பிடவும் திமுக இந்தப் பிரச்சனையில் இந்த அரசுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திடும் என்ற உறுதியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications