ஈரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் மீது தாக்குதல்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமான தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கேரளாவில் தமிழர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கேரளாவில் தங்கி எஸ்டேட்களில் வேலை பார்க்கும் தமிழ்க் குடும்பங்கள் உயிருக்கு பயந்து இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அதில் பிரபல தங்க நகை கடைகளான ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸும் அடக்கம். ஆர்.கே.வி. சாலையில் உள்ள மார்க்கெட் வியாபாரிகள் மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கினர். இதில் கடைகளின் கண்ணாடிகள், விளம்பரப் பலகைகள் ஆகியவை சேதமடைந்தன.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம்- த.தே.பொ.கவினருக்கு ஜாமீன்:
இதற்கிடையே சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் நிபந்தனை
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை வெளியேறக்கோரி சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு க.அருணபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணை பெற்றனர்.
சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது, வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று ழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு 14.12.2012 எழும்பூர் நீதிமன்றத்திலும், சைதை நீதிமன்றத்திலும் வாதிட்டது.
இதன் அடிப்படையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.