எத்தனை முறை பூகம்பம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது: வைகோ
ராஜபாளையம்: எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்களால் அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தெரிவி்த்து வருகிறது. இந்நிலையில் தான் எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
எத்தனை முறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை உடையாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 21ம் தேதி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 13 இடங்களில் மதிமுக சார்பில் அறப்போராட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தையும் அடைத்துவிட்டால் கேரளா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்த தான் இந்த போராட்டம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தமிழக அரசு கையாளும் விதம் மிகச் சரியானது. கேரள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டிவிட்டால் அம்மாநில போலீசாரால் அணைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. எனவே, அணைக்கு மத்திய பாதுகாப்பு படையினரை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications