மதுரையில் நூதன முறையில் திருடி வந்த மோதிர திருடன் கைது
மதுரை: மதுரையில் தங்க மோதிரங்கள் அணிந்து வருபவர்களை மிரட்டி, குழப்பி மோதிரங்களை திருடி வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(33). அவர் சாலையில் மோதிரம் அணிந்து வரும் நபர்களை குறி வைத்து திருடும் பழக்கம் கொண்டவர். சாலையில் மோதிரம் அணிந்து வருபவர்களை கண்டால் அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து செல்வார்.
பின்னர் மோதிரம் அணிந்த நபரை தடுக்கிவிட்டுவார். உடனே அவர் செல்போனை எடுத்து யாரிடமோ நீண்டநேரம் பேசுவார். அப்போது மோதிரம் அணிந்துள்ள நபரின் அடையாளங்களைத் தெரிவிப்பார். பின்னர் செல்போனை வைத்துவிடுவார்.
அதன் பிறகு அவரது செல்போன் பேச்சைக் கேட்டு குழம்பி நிற்கும் நபரிடம், நீ தானே கடையில் பிரச்சனை செய்தது. நீ தானே அந்த பொருளை எடுத்துக் கொண்டு ஓடியது என்று எந்த சம்பந்தமும் இல்லாமல் கேள்வி கேட்பார். இதில் மேலும் குழப்பம் அடையும் மோதிரம் அணிந்த நபர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டே நிற்பார்கள்.
அப்போது செல்வக்குமார் தனது செல்போனில் மீண்டும் யாரிடமோ பேசுவார். அதன்பிறகு என் அண்ணன் உன்னை பார்த்தால் கொன்றுவிடுவான், அதனால் இங்கிருந்து ஓடிவிடு. இது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடம் என்பதால் உன் மோதிரத்தை விரலில் இருந்து கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொள் என்று அறிவுரை கூறி அனுப்புவார்.
அப்போது மோதிரம் அணிந்திருப்பவர் குழப்பத்துடன் இருக்கும் போது அவரது மோதிரத்தை செல்வக்குமார் நைசாக திருடிவிடுவார். இதேபோல பல ஆண்டுகளாக மதுரை பகுதியில் செல்வக்குமார் பலரிடம் இருந்து மோதிரங்களை திருடியுள்ளார்.
மேலும் திருவிழாவில் பெண்களிடம் நகைகளை பறிப்பதிலும் செல்வக்குமார் கை தேர்ந்தவர். இந்த நிலையில் உதவி கமிஷனர் கலைமோகன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், மலைச்சாமி, தங்கத்துரை உள்ளிட்டோர் செல்வக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அஇவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் திருடிய மோதிரங்களையும், நகைகளையும் செல்வக்குமார் நகைக் கடைகளிலும், தனியார் ஆபரண நிறுவனங்களிலும் போலியான பெயர்களில் விற்றது தெரிய வந்தது. அவரிடம் மோதிரங்களை பறிக் கொடுத்த பலருக்கும் அவர் ஒரு திருடன் என்பதே தெரியாது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications