முல்லைப் பெரியாறு பிரச்சனை: தேயிலை, ஏலக்காய் விற்பனை கடும் வீழ்ச்சி
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தமிழகம், கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உற்பத்தியாகும் தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம், கேரளா மாநிலங்கள் இடையே நிலவி வரும் பதற்றம் இன்னும் தணியவில்லை. தமிழகத்தில் இருந்து கூடலூர், குமுளி வழியாக போக்குவரத்து இன்னும் சீரகவில்லை. இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை வழியாக சென்று வருகின்றன.
கேரளாவில் தேக்கடி, குமுளி, மூணாறு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தேயிலை, ஏலக்காய், மிளகு, ஜீரகம், கிராம்பு உள்பட நறுமண பொருட்கள் அதிகளவில் விளைகின்றன. குமுளியில் நறுமணப் பொருள் விற்பனைக்காக பெரிய சந்தையும் உள்ளது.
இங்கிருந்து நறுமண பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக்காக குமுளி, வண்டிபெரியார், பாம்பனாறு உள்பட சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன.
நவம்பர் முதல் ஜனவரி வரை இங்கு நிலவும் சீசன் நேரத்தில் தான் ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
தவிர ஐயப்பன் பக்தர்கள் சீசன் என்பதால் பக்தர்களை நம்பி ஏராளமான தற்காலிக கடைகளும் முளைப்பது வழக்கம். இந்த கடைகளில் தினமும் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வியாபாரம் நடைபெறுகிறது.
ஆனால் தற்போது குமுளி வழியாக சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் உள்பட யாரும் வராததால் இந்த பகுதிகளில் தேயிலை, நறுமணப் பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தினமும் ரூ.40,000 வரை விற்பனை நடைபெறும் கடைகளில் ரூ.10,000க்கும் குறைவாகவே விற்பனை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications