மத்திய அமைச்சரவை மாற்றம்: பதவி பெற திமுக அவசரப்படவில்லை!- கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேளவிகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: மாஸ்கோ சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இரண்டு வார காலத்தில் கூடங்குளம் பணிகள் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். அவ்வாறு செய்தால் போராட்டத்தைப் பெரிதாக்குவோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நீங்கள் கூறிய செய்திகளை கேட்டுக்கொண்டேன். பணிகள் தொடங்கும் என்று பிரதமர் கூறியிருக்கிறார் என்றால், அனைவரையும் கலந்து கொண்டுதான் சொல்லியிருக்க முடியும். கலந்து கொண்டு சொல்லியிருந்தால் அந்த கருத்து வரவேற்கத்தக்கதாகவே அமையும்.
மத்திய அமைச்சரவையில் தி.மு.க.?
கேள்வி: இரண்டு நாட்களில் அஜீத்சிங் மத்திய அமைச்சராக பதவி பிரமாணம் ஏற்கத் தயாராக உள்ளார். தி.மு.க.வுக்கு ஏற்கெனவே இரண்டு அமைச்சர் இடங்கள் காலியாக உள்ளதை இப்போது நினைவுபடுத்தி ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: இந்த முறை பதவி ஏற்பில் தி.மு.க. இடம் பெறுமா?
பதில்: நாங்கள் பதவி பெறுவதில் அவ்வளவாக அவசரப்படவில்லை.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை
கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நீங்கள் அவசரக் கடிதம் எழுதியுள்ளீர்கள். அதற்கு பிறகும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடருகிறதே; அரசு என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: அதனால்தான் நான் ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று சொல்லியிருந்தேன். ஆனால் அது கூட்டப்படாமல் சட்டமன்ற சிறப்பு கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தால் மற்ற கட்சிகளும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கருத்துக்களைக் கூறி விவாதித்திருக்க முடியும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.