திருச்சியில் ஐயப்ப பக்தர்களின் வேன் மீது லாரி மோதல்: வேன் ஓட்டுநர் உட்பட 17 பேர் காயம்
திருச்சி: சென்னையில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்ற ஐயப்ப பக்தர்களின் வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 20 ஐயப்ப பக்தர்கள் மஹிந்திரா வேன் ஒன்றில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே வேனை சாலையோரத்தில் நிறுத்தினர்.
வேனில் இருந்த சிலர் இயற்கை உபாதைக்காக இறங்கிச் சென்றனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து மதுரையை நோக்கி வந்த லாரி சாலையோரம் நின்றிருந்த வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஓட்டுநரான முதலிவாக்கத்தைச் சேர்ந்த ஷியாம்(24), ஐயப்ப பக்தர்களான போரூரைச் சேர்ந்த பிரேம்குமார்(32), மதுராந்தகத்தைச் சேர்ந்த பாபு(36), சகாதேவன்(17), கார்த்தி(21) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(18), தட்சிணாமூர்த்தி(31), பாலுச்சாமி(29), பிரேம்குமார்(18) உட்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியினரின் உதவியுடன் காயமடைந்த 17 பேரையும் மீட்டு, திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஆந்திர மாநில குண்டூரைச் சேர்ந்த நரசிம்மராஜுவை(38) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications