முல்லைப்பெரியாறு அணையைக் காக்க வலியுறுத்தி 30 ஊர்களில் கடையடைப்பு
ஈரோடு: முல்லைப்பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரள அரசைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தியும் கோபி செட்டிபாளையத்தை சுற்றியுள்ள 30 ஊர்க்களில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாடு – கேரளா இடையே பதற்றம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு, பேரணி, நீதிமன்ற புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சுற்றியுள்ள, டி.என்.பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட 30 ஊர் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி, பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட ஊர்களை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகன உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.