மீண்டும் ஹசாரேவிடம் பணிந்தது மத்திய அரசு- நாளை புதிய லோக்பால் மசோதா தாக்கல்!!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: அரசியல் சாசன அந்தஸ்துடன் கூடிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது.

ஆனால், இதற்கு அன்னா ஹசாரே தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதிய லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. அரசியல் சாசன அந்தஸ்து:

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஹசாரே கோருவது என்ன?:

இந்த அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து கூடாது, அது மத்திய அரசின் கீழ் வராத சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும்.

2. லோக்பால் வரம்புக்குள் பிரதமர், ஆனால்..:

அன்னா ஹசாரே கோரியபடி, லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனால், முழுமையாக அல்ல. சர்வதேச உறவு, பொது ஒழுங்கு, அணு சக்தி, விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகள் பற்றி லோக்பால் விசாரிக்க முடியாது. மற்ற விவகாரங்களில் மட்டுமே பிரதமரை லோக்பால் கேள்வி கேட்க முடியும்.

அதே போல எடுத்த எடுப்பில் பிரதமருக்கு எதிரான விசாரணையை லோக்பால் நடத்த முடியாது. இது குறித்து லோக்பால் சட்ட பெஞ்ச் முதலில் கூடி விவாதித்து முடிவெடுக்கும். இந்த பெஞ்சின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு பேர் ஒப்புதல் தந்தால் மட்டுமே பிரதமரை விசாரிக்க முடியும். விசாரணை பகிரங்கமாக நடைபெறாது. ஒருவேளை புகார் தள்ளுபடி செய்யப்பட்டால், அதனை பகிரங்கப்படுத்தக் கூடாது.

ஹசாரே கோருவது என்ன?:

இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமர் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனால், எந்த நிபந்தனைகளும் விதிவிலக்குகளும் இல்லாமல் பிரதமரை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரி வருகிறார்.

3. லோக்பால் வரம்புக்குள் சிபிஐ இல்லை:

அண்ணா ஹசாரேயின் நிர்பந்தத்துக்கு அடிபணியப் போவதில்லை என்பதைக் காட்டும் விதத்தில் சி.பி.ஐயை லோக்பால் வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வரவில்லை. ஆனால், லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து இருந்தாலும், ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்குமாறு, சி.பி.ஐக்கு பரிந்துரை செய்ய மட்டுமே முடியும். இவ்வாறு லோக்பால் அமைப்பின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிக்கும் உரிமை மட்டுமே லோக்பாலுக்கு வழங்கப்படும். அவ்வளவு தான்.

சி.பி.ஐயின் புதிய இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்யும்.

ஹசாரே கோருவது என்ன?:

சிபிஐ அமைப்பை முழுமையாக லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சிபிஐ இயக்குனர் தேர்வில் மத்திய அரசு தலையிடக் கூடாது.

4. தானாக விசாரிக்க முடியாது:

எந்த ஒரு வழக்கையும் லோக்பால் அமைப்பு தானாக விசாரிக்க முடியாது. புகாரின் அடிப்படையிலேயே விசாரிக்க முடியும். ஊழல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையை மட்டுமே லோக்பால் மேற்கொள்ள முடியும். இதற்கென விசாரணை இயக்குனர் நியமிக்கப்படுவார். அந்த இயக்குனரின் கீழ் விசாரணைப் பிரிவு ஒன்றும் இருக்கும்.

இதையடுத்து விசாரணையை நடத்தும்படி, சி.பி.ஐயை, லோக்பால் அமைப்பு வலியுறுத்த முடியும். இந்த விசாரணையை, 180 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பொதுவாக, விசாரணையை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும், தேவைப்பட்டால், விசாரணை காலத்தை நீட்டிக்கலாம். சிபிஐக்கு பரிந்துரை செய்யப்படும் வழக்குகளின் விசாரணை அறிக்கை, லோக்பால் அமைப்பிடம் தாக்கல் செய்யப்படும். லோக்பால் அமைப்பின் மூன்று பேர் கொண்ட குழு, இந்த அறிக்கையை ஆய்வு செய்து, குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யும். குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டால், லோக்பாலின் விசாரணைப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணையை துவக்கலாம்.

லோக்பால் அனுப்பியுள்ள புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது தனது அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) லோக்பாலுக்கு அனுப்ப வேண்டும்.

ஹசாரே கோருவது என்ன?:

லோக்பால் அமைப்புக்கு போதிய விசாரணை அதிகாரத்தைத் தராததன் மூலம், அதை சிபிஐயின் போஸ்ட் ஆபிஸ் மாதிரி மாற்றிவிட்டனர். இதை ஏற்க முடியாது. சிபிஐக்கு இணையான விசாரணை அதிகாரம் லோக்பால் அமைப்புக்கும் வேண்டும். இதனால் சிபிஐ அமைப்பையே லோக்பால் அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இப்படி மேற்கூறப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு கொண்டு வரும் மசோதாவுக்கும் ஹசாரே குழு முன் வைக்கும் கோரிக்கைகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

ரெய்ட் நடத்தும் அதிகாரம்:

ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தவும், ஆவணங்களை பறிமுதல் செய்யவும், லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு. மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் பணியாற்றும் எந்த ஒரு அதிகாரியையும் இந்த ரெய்டுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரமும், லோக்பாலுக்கு உண்டு. மேலும், ஊழல் வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடும் அதிகாரமும் லோக்பாலுக்கு உண்டு.

ஹசாரே கோருவது என்ன?:

இந்த விஷயத்தில் ஹசாரேயும் இதையே தான் கோருகிறார்.

50 சதவீத இட ஒதுக்கீடு:

லோக்பால் சட்ட பெஞ்ச்களில் 50 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஹசாரே கோருவது என்ன?:

இந்த விஷயத்தில் அன்னா ஹசாரே மாபெரும் மெளனத்தை கடைபிடித்து வருகிறார். இவர் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர் என்று கூறி இவருக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர லோக்பால் அமைப்பு குறித்த மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

- லோக்பால் அமைப்பு 8 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும்.

- இதன் பதவிகாலம் 5 ஆண்டுகள்.

- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் என, இவர்களில் யாராவது ஒருவர், லோக்பால் அமைப்பின் தலைவராக இருப்பார்.

- லோக்பால் அமைப்பில் உள்ள உறுப்பினர்களை, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு பரிந்துரைந்த சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட குழு, தேர்வு செய்யும்.

- லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்தான் கொண்டு வர முடியும். அதற்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு தர வேண்டும்.

- ஊழல் புகார் மீதான முதல்கட்ட விசாரணையை நடத்த இயக்குனர் (விசாரணை) நியமிக்கப்படுவார். வழக்குகளைத் தொடர தனியாக ஒரு இயக்குனரும் இருப்பார்.

- லோக்பால் உறுப்பினர்களில் பாதி பேர் நீதித்துறை பின்னணியை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த மசோதாவைத் தான் நாளை மக்களவையிலும் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், இதை ஹசாரே தரப்பு ஏற்காததையடுத்து இதில் சில மாற்றங்களுடன் நாளை புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+