பண்டிகை வியாபாரம்: சீலை அகற்ற தி.நகர் வியாபாரிகள் கோரிக்கை- கண்காணிப்புக் குழுவை அணுக உத்தரவு
சென்னை: சிஎம்டிஏ அதிகாரிகள் சீல்வைத்த கட்டடங்களின் சீலை அகற்ற கோரி தியாகராயநகர் வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கண்காணிப்பு குழுவை அணுக உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 28 கட்டடங்களுக்கு கடந்த அக்டோபர் 31 ம் தேதி சிஎம்டிஏ, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வருவதை ஒட்டி வியாபாரம் செய்வதற்காக சீலை அகற்ற உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் தி.நகர் வியாபாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய் இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் இதுதொடர்பாக சிஎம்டிஏவின் கண்காணிப்புக் குழுவை சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டும் என்றும், சீலை அகற்றுவதா வேண்டாமா என்பதை கண்காணிப்புக் குழு, சட்டப்படி முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் உத்தரவினை அடுத்து 500க்கும் மேற்பட்ட கடைகளில் புத்தாண்டு, பொங்கல் வியாபாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications