டிடிவி தினகரனுக்கு சட்டசபையில் நோஸ் கட் கொடுத்த காமராஜ்.. 5 வருஷமும் விஜய்க்குதான் ஆதரவாம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ,
விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமமுக (நீக்கப்பட்ட) எம்எல்ஏ காமராஜ், "கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார் விஜய்.
தவெகவுக்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன். நேற்றும் ஆதரிக்கிறேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். தமிழகத்தை காப்பாற்ற வந்துள்ள முதல்வர் என்னை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா. முதல்வர் என்னையும், மன்னார்குடி தொகுதியையும் காப்பாற்ற வேண்டும். முதல்வர் பதவியேற்று 4 நாட்கள் தான் ஆகிறது. திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் தானாக சரண்டராகி வருகிறார்கள்.
தமிழகத்திற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். கஞ்சா விற்றவர்கள், கள்ள கடத்தல், கட்ட பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. அரசும், அரசியலும் தேடி வந்த ஒரே நபர் முதல்வர் விஜய்" என்றார். அவர் பேசி கொண்டிருக்கும்போது அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக காமராஜ் தவெகவுக்கு ஆதரவு என்று கூறியதால், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அமமுக பொதுச்செயலர் நேற்று அறிவித்தார். அதையும் மீறி அவர் தவெகவுக்கு எப்போதும் ஆதரவு என்று உறுதியாக பேசியிருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications