கனிமொழிக்கு புது வக்கீலைப் பிடிக்க டெல்லியில் ஸ்டாலின் முகாம்!
சென்னை: முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 2ஜி வழக்கில் கனிமொழிக்கு ஆஜராவதற்காக புதிய வழக்கறிஞரை தேர்வு செய்ய அவர் டெல்லி சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஊழலில் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கனிமொழி ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும் தினசரி கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
2ஜி வழக்கில் இருந்து கனிமொழியை விடுவித்து நிரந்தரமாக விடுதலை வாங்கித் தர வேண்டும் என்று திமுக தலைமை மிகவும் பிரயத்தனப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனிமொழிக்கு ஆஜராவதற்காக புதிய வழக்கறிஞரை தேர்வு செய்வதற்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருக்காக தற்போது ஆஜராகி வரும் வக்கீல்கள் மீது கருணாநிதி குடும்பத்திற்கு அவ்வளவாக திருப்தி இல்லை. எப்போதோ கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் வக்கீல்களின் வாதத் திறமையின்மையால்தான் இத்தனை காலம் அவர் சிறையில் அடைபட்டிருக்க வேண்டியதாயிற்று என்பது கருணாநிதி குடும்பத்தாரின் விசனமாகும். இந்த நிலையில்தான் புதிய வக்கீலைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.