முல்லைப் பெரியாறு அணைக்காக தற்கொலை செய்த தேமுதிக பிரமுகர் உடலுக்கு ஓ.பி.எஸ் அஞ்சலி
தேனி: முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி விருத்தாச்சலத்தில் உள்ள விடுதியில் தங்கி தற்கொலை செய்து கொண்ட தேமுதிக தலைமைக் கழக பேச்சாளர் சேகரின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுபப்டி ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் சேகரின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிக தலைமைக் கழக பேச்சாளராக இருந்து வந்தார். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மனம் உடைந்த அவர் விஜயகாந்த் முதன் முதலி்ல வெற்றி பெற்ற விருத்தாச்சலத்திற்கு வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மேனகா என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
சேகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சேகர் வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவித்து நிதியுதவியை குடும்பத்தாரிடம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி சேகர் வீட்டுக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி நிதியுதவியையும் அளித்தார்.