வடமாநிலங்களில் கடும் குளிர் 114 பேர் உயிரிழப்பு – ரயில், விமானங்கள் தாமதம்
டெல்லி: காஷ்மீர் டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பதோடு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்கள் இந்த ஆண்டு கடுமையான பனி கொட்டி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் வெப்பநிலை குறைந்து உறை நிலைக்கும் கீழே சென்று விட்டது. காஷ்மீரின் வடபகுதியில் உள்ள சுற்றுலாத் தளமான குல்மார்க் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை மைனஸ் 12 டிகிரியாகவும், காஷ்மீரின், தெற்கு பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் மைனஸ் 8.2 டிகிரியாகவும் வெப்பநிலை காணப்பட்டது.
லடாக்கில் உள்ள மலைப்பகுதியான லே மாவட்டத்தில் வெப்பநிலை மிகக்குறைந்து மைனஸ் 17.8 டிகிரியாகவும், கார்கில் மாவட்டத்தில் மைனஸ் 13.4 டிகிரியாகவும், மாநிலத்தின் கோடைக் கால தலைநகரமான ஸ்ரீநகரில் மைனஸ் 1.2 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவானது.
டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், தோகா, அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து வந்த 2 ஜெட் விமானங்களும், துபாயில் இருந்து வந்த ஒரு கிங்பிஷர் விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து வந்த ஒரு சரக்கு விமானம், ஆமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. விமான ஓடுதளம் கண்ணில் தென்படாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், 75 விமானங்கள் கால அட்டவணைப்படி புறப்படாமல், தாமதமாக புறப்பட்டன. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கடுமையான மூடு பனியானது, காலை 6 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரை தொடர்நது நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
114 பேர் உயிரிழப்பு
கடும் குளிரால் வட மாநிலங்களில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக டெல்லி உட்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில், குளிரால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், சனிக்கிழமை காலையில் மட்டுமே சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
அதிகமான பலி உத்திரபிரதேச மாநிலத்தில் தான் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications