பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பாராளுமன்றக் குழு அமைப்பு - ராமதாஸ் வரவேற்பு
சென்னை: பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தனி நாடாளுமன்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எனினும் பிற பிறபடுத்தப்பட்டோரின் நலன்களை பாதுக்காக்க இது மட்டுமே போதுமானது அல்ல. பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமானால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசை கட்டுபடுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசியல் சட்ட அதிகாரம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை இன்னும் 5 சதவீதம் கூட தாண்டவில்லை. உயர் பதவிகளில் இருக்கும் உயர் ஜாதியினர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து கொள்வது தான் இதற்கு காரணம்.
இந்த குறையை போக்கி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடஒதுக்கீ்ட்டில் தொகுப்பு ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதனை உடனடியாக செயல்படுத்தவும், வன்னிய சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் 2 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications