கேரளாவில் விஷம்போல் ஏறிய காய்கறி விலை: தக்காளி கிலோ ரூ.200, வெண்டை ரூ.130
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எல்லைகளில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் கேரளாவில் காய்கறி, பழங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும் விற்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரள அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வழியாக கேரளாவுக்கு செல்லும் 13 வழிகளையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராடி வருவதால் பல பாதைகளில் கேரளாவுக்கு அத்தியவாசியப் பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கேரளாவில் அத்திவாசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதே போல் பால், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கொல்லத்தில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும், முட்டைகோஸ் ரூ.60க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications