பிரதமர் வருகையால் ஒரு பலனும் கிடையாது- திட்டமிட்டபடி கருப்புக் கொடி காட்டுவோம்: விஜயகாந்த்
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் அரசு பல வகைகளிலும் தமிழகத்திற்கு எந்த நல்லதையும் செய்யத் தவறி விட்டது. எனவே பிரதமர் தமிழகம் வரும்போது அவருக்கு நிச்சயம் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம். அதில் மாற்றம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவர் மீதான தாக்குதல், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரிப் பிரச்சினை என எந்தப் பிரச்சினையிலும் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை. தமிழர்களின் அத்தனைப் பிரச்சினையிலும் மத்திய அரசு பாராமுகமாகவே உள்ளது.
விலைவாசி உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. எனவே இப்போது பிரதமர் தமிழகத்துக்கு வருவதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை,. ஆகவே பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டுவது என்பதில் மாற்றமில்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று கூறினார் விஜயகாந்த்.