மலையாளி பேக்கரி, உரிமையாளர் மீது தாக்குதல்: 2 பெரியார் திகவினர் கைது
காஞ்சிபுரம்: முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக காஞ்சிபுரத்தில் மலையாளி ஒருவரின் பேக்கரியையும், அவரையும் தாக்கியதற்காக பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மூங்கில் மண்டபம் அருகே கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அவரது கடையில் ஏராளமான கேக்குகள் தயார் செய்து வைத்திருந்தார். கடையை வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 4 மணிக்கு 4 வாலிபர்கள் அவரது கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் வாங்கினர். பாட்டிலுக்கு பணம் கேட்டதற்கு அவர்கள் முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் கொடுக்காமல் இப்பொழுது தண்ணீர் பாட்டிலுக்கா பணம் கேட்கிறாய் என்று கூறி முஸ்தபாவைத் தாக்கினர். பின்னர் கடையையும் அடித்து நொறுக்கினர். இதில் கடையில் இருந்த ஏராளமான கேக்குகள் நாசமாகின. இதைப்பார்த்த கடை ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரை பிடித்தனர். மற்ற இருவர் தப்பியோடிவிட்டனர்.
விசாரணையில் அந்த 2 பேரும் பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த அசோக் நகரைச் சேர்ந்த தஞ்சை தமிழன் (24), வேளச்சேரியை சேர்ந்த முருகன் (29) என்பது தெரிய வந்தது. விசாரணையில் முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாகத் தான் அந்த பேக்கரியைத் தாக்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய இருவர் பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள், கேக்குகள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications