கிறிஸ்துமஸ் கொண்டாட வரமறுத்த மனைவி: கணவன் தீக்குளித்து தற்கொலை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வீட்டுக்கு வர மனைவி மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (47). பெயிண்டர். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி கோபத்தில் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சங்கர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வீட்டுக்கு வருமாறு இருதயராஜ் தனது மனைவியைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த இருதயராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனினறி இறந்தார்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.