முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'கொலவெறி'யைக் கலக்கும் மலையாளிகள்!
சென்னை: முல்லைப்பெரியாறு அணைக்கு பிரச்சினையால் இருமாநிலங்களுக்கிடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டு எதிராக இணைய தளங்களில் தவறான பிரசாரத்தை கேரள மாநிலத்தினர் சிலர் செய்து வருகின்றனர். தனுஷ் எழுதிப் பாடிய உலகப் புகழ் பெற்ற 'தமிழ் இலக்கிய'ப் பாடலான ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடலை ரீ மிக்ஸ் செய்து இணையதளத்தில் உலா வர விட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருவதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை அந்த மாநில ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு பெரிதாக்கி வருகின்றன. இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் வகையில், கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் அராஜகம் தொடர்கிறது. கேரள ஊடகங்கள் பொறுப்பின்றி தவறான தகவல்களையும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
இணைய தளங்களில் விஷமம்
டேம் 999 என்ற திரைப்படத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள இயக்குநர் சோகன் ராய், உண்மைக்கு மாறான தகவல்களை சித்தரித்து தன் பங்குக்கு அணை குறித்த பீதியை விஸ்தரித்தார்.
இதுபோல முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களைக் கொண்ட குறுந்தகடுகளை கேரளாவைச் சேர்ந்தவர்கள் தயாரித்துள்ளனர். இதை கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கேரள மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரிகளில் ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இணையதளத்திலும் விஷம பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘டேம் 999’ மற்றும் முல்லைப் பெரியாறு அணை உடைந்து, இடுக்கி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவது போல் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
கொலைவெறி பாடல் ரீமிக்ஸ்
இந்தச் சூழ்நிலையில், நடிகர் தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொல வெறி’ என்ற பாடல் மூலமும் விஷம பிரசாரத்தில் சிலர் இறங்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை இழிவாக சித்தரித்தும், அணை உடையும் என்ற தவறான தகவல்களோடும், தமிழக மக்கள் மீது வெறுப்பை உமிழும் வார்த்தைகளைக் கொண்டும் அந்த பாடலை ரீ மிக்ஸ் செய்துள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு பாடல்கள், ஆவணப் படங்களை யூ ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஏம்ப்பா இந்த கொலை வெறி உங்களுக்கு....??