அன்னாவுக்கு காய்ச்சல்னா, பேடி, கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதானே?: காங்.
டெல்லி: அன்னா விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக அவரது குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கேட்டுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே இன்று முதல் 3 நாட்களுக்கு மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக அவர் விஷக்காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாது அறிவித்தவாறு இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
அன்னா விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக அவரது குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பூஷன்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அன்னா குழு இரக்கமற்றது என்று தெரிவித்துள்ளார்.
அன்னாவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது குறித்து அரவிந்த் ஜெக்ரிவால் கூறுகையில், அரசு உள்பட சிலர் எங்கள் போராட்டத்திற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் மற்றும் தலித்களுக்கு எதிரான அமைப்புகள் இருப்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் சிறிதும் உண்மையில்லை. ஊழல் மதத்தைப் பார்ப்பதில்லை. மாறாக அது நம்மை பிரித்துவிடும் என்று கூறியுள்ளார்.