காங். அரசு கடுப்பில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது: சுஷ்மா தாக்கு

கடந்த வியாழக்கிழமை லோக்சபாவில் மத்திய அரசு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே, அறிமுக நிலையிலேயே அத்தனை எதிர்க்கட்சிகளும் அதை கடுமையாக எதிர்த்தன.
தற்போதுள்ள வடிவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பாஜக, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜவாதி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அம்சங்களுக்கு இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
லோக்பால் வரம்பிற்குள் பிரதமரைக் கொண்டு வரக்கூடாது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
லோக்பால் மசோதா குறித்து பல எம்.பிக்களுக்கு இன்னும் முழுமையாக விளங்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியில் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் ஆர்வம் காணப்படுகிறது.
விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இந்த மசோதாவில் அன்னா மற்றும் குழுவினருக்கும் திருப்தி இல்லை. அரசின் இந்த மசோதாவால் ஊழலை ஒழி்கக முடியாது. மாறாக ஊழல் அரசியல்வாதிகளை இந்த மசோதா காப்பாற்றும் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அன்னா குழு கேட்ட பல கோரிக்கைகளை அரசு தனது லோக்பால் மசோதாவில் இடம் பெறச் செய்யவில்லை.
இந்த நிலையில் இன்று காலை லோக்சபா கூடியது. அப்போது சில திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதாவை மத்திய அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்து விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
நாராயணசாமி பேசுகையில், லோக்பால் விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கும் அன்னா குழுவைத் தாக்கிப் பேசினார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றும் கொண்டு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு மசோதா மீதான விவாதம் துவங்கியது. பாஜக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் அமைச்சர் நாராயணசாமி. அரசு ஏன் போராடும் குணத்தோடு இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
அவையின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த மசோதா இல்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசு கடுப்பில் தான் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசாதோவால் ஊழலை அழிக்க முடியாது. இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது.
இந்த மசோதாவில் 2 விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக, விதி மீறலாக உள்ளது. லோக் ஆயுக்தா கட்டாயமா, மாநிலங்களின் விருப்பமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications