முல்லை பெரியாறு பிரச்சனை: மத்திய அரசின் முயற்சி பலன் அளிக்கவில்லை- ஏகே அந்தோணி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணி கூறினார்.
இதுகுறித்து திருச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாடு, கேரளா இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டமானதாகும். இந்த பிரச்சனையை சமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே கேரளாவில் உள்ள அனைவரின் விருப்பமாகும். மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறாகும். மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகள் இதுவரை எந்த பலனையும் தரவில்லை என்பதுதான் உண்மையாகும். ஆனாலும் அதனால் பி்ன் வாங்காமல் இந்த பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.
பேச்சுவார்த்தை தேவை
இந்த விவகாரத்தில் கேரளாவும், தமிழ்நாடும் வெவ்வேறு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. இதுதான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் இருக்க முக்கிய காரணம். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு மாநிலங்களும் முயற்சிக்க வேண்டும். இரு மாநில தலைவர்களும் ஒரு மேஜை முன் அமர்ந்து பேசினால் நிச்சயம் பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் இதற்கான முயற்சிகளை தலைவர்கள் ஏன் ஈடுபட மறுக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.
மத்திய அரசு தலையிட்டு முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தேசிய கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்பது குறித்து இதுவரை எந்த ஆலோசனையையும் யாரும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications