பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரகால குழு நிறுத்தி வைப்பு- மத்திய அரசு கடிதம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நிலநடுக்கம் மற்றும் பெரு வெள்ளம் ஏற்படும் சூழ்நிலைகளில் முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் நீரோட்ட பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும்போது, அவற்றை எதிர்கொள்ள அவசர கால திட்டம் தயாரிக்க வல்லுநர் குழு ஒன்றை கடந்த 12ம் தேதி பிரதமரின் தலைமையின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியது.
இந்த குசும்புத்தனமான நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அவசரகால திட்டம் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய அரசு கடிதம்
இந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் நில அதிர்வு போன்றவை ஏற்பட்டால் அவசரத் திட்டம் வகுக்கும் குழு அமைப்பதற்காக உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை இந்த குழுவுக்கான உத்தவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குழுவில் கேரளாவிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதட முன்வந்த ஐ.ஐ.டி ரூர்கீ பேராசிரியர் டி.கே. பால் இடம்பெற்றிருந்தது உச்சநீதிமன்றத்தின் முடிவை பாதிக்கக் கூடும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதனையடுத்து மத்திய அரசு அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications