லோக்பால்: பாஜக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு பேச்சு: கபில் சிபல்
டெல்லி: வெளியே வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்கிற அதே பாஜக நாடாளுமன்றத்திற்குள் வந்தால் அரசின் லோக்பால் மசோதா அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என்று குறை கூறுகின்றது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி. நாராயணசாமி மசோதாவின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து அதன் மீதான விவாதத்தை துவக்கி வைத்தார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் செய்வதற்காகத் தான் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சட்டப்பிரிவு 252 பற்றி குறை சொல்கிறார். வலுவான லோக்பால் மசோதா வரக்கூடாது என்பதற்காக பாஜக பெரும் சதி செய்கின்றது.
பாஜக தங்கள் முதல்வர்கள் லோக்ஆயுக்தாவால் கண்காணிக்கப்படக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளது. லோக்பால் மசோதா குறித்து சுஷ்மா கூறிய குறைகள் நியாயமற்றது. எதற்காக லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது?. பாஜக இரட்டை வேடம் போடுவதை விட்டுவிட்டு அது ஆளும் மாநிலங்களில் ஊழலை எதிர்த்து போராட வேண்டும்.
பாஜக அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து செயல்படுகிறது. அவரது அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது. வெளியே வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்கிற அதே பாஜக நாடாளுமன்றத்திற்குள் வந்தால் அரசின் லோக்பால் மசோதா அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என்று குறை கூறுகின்றது. அனைத்து விஷயங்களிலும் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை அக்கட்சி காப்பாற்றவே முயன்றது.
லோக்பால் மசோதா மட்டும் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். வலுவான லோக்பால் மசோதா விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும். லோக்பால் மசோதாவை கொண்டு வருவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எப்பொழுதுமே முனைப்பாக உள்ளது. நாங்கள் எங்கள் கடமையை செய்துள்ளோம்.
ஊழலை எதிர்த்து போராடுவதில் பாஜக அவ்வளவு முனைப்பாக இருந்தால், இன்னும் 2 மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் வலுவான லோக்ஆயுக்தா அமைக்கப்படும் என்று அதனால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க முடியுமா?
பாஜக கடந்த 1 ஆண்டு காலமாக பிரதமர் மன்மோகன் சிங்கை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாட்டில் சந்தேகம் வேண்டாம். சிபிஐ அமைப்பை தன்னிறைவு பெற்ற அமைப்பாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். சிபிஐ டைரக்டருக்கு உதவ மேலும் சில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
பாஜக ஆட்சியில் இருக்கையில் அதை தவறாகப் பயன்படுத்தியது. தற்போது எதிர்கட்சியாக இருக்கையில் மட்டும் குற்றம்கூறுகிறது. எதிர்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் விட்டுவிட்டு வலுவான லோக்பால் மசோதா நிறைவேற உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அவர் பேசும்போதே கூச்சலிட்ட எதிர்கட்சிகள் பேசி முடித்ததும் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications