நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த தனி நபருக்கும் தலைவணங்க மாட்டோம்- நாராயணசாமி

திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி. நாராயணசாமி திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தி வைத்து பேசியதாவது,
அன்னா குழுவினர், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு தான் லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. லோக்பால் மசோதாவைத் தயாரிக்க புதிய முயற்சியாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் அன்னா மற்றும் அவரது குழுவினர் மசோதாவில் பல திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
நாங்கள் நாடாளுமன்றத்தை தவிர வேறு யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சி்ககுபவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்பட பல சிறப்பு அம்சங்கள் லோக்பால் மசோதாவில் உள்ளன என்றார்.
அப்போது குஜராத்திலும், பிற பாஜக ஆளும் மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாக்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம் சரியாக இல்லாதது குறித்து நாராயணசாமி குறிப்பிட்டார். இதற்கு பாஜக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நாராயணசாமி தொடர்ந்து பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது குறித்து 5 பேர் கொண்ட குழு எங்களை வலியுறுத்தக்கூடாது. நாடாளுமன்றம் மட்டும் தான் மசோதாவை நிறைவேற்றுமே தவிர தெருவிலோ, மைதானத்திலோ உள்ள யாராலும் நிறைவேற்ற முடியாது. அவர்கள் நாடாளுமன்றத்திற்காக முடிவு எடுக்க முடியாது. இதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் எழுந்து, லோக்பால் மசோதா அரசியலைமைப்பின் கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications