கிறிஸ்துமஸ் விருந்தில் மோதல்-மில் தொழிலாளி கொலை: 10 பேருக்கு வலைவீச்சு
நெல்லை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 10 பேரைத் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் விகேபுரம் பகுதி சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி ஆலமரத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் கதிரேசன். ஐடிஐ படித்துள்ள அவர் விகேபுரம் மதுரா கோட்ஸ் மில்லில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வேதக்கண்ணு மகன் சாமுவேல். கூலித் தொழிலாளி. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றிரவு விகேபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களை சாமுவேல் விருந்துக்கு அழைத்திருந்தார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மில் தொழிலாளி கதிரேசன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள், வைகுண்டம், மணிகண்டன் ஆகிய 4 பேர் சாமுவேல் அழைத்து வந்த நண்பர்களிடம் சென்று எங்கள் ஊரில் ஏற்கனவே அடிக்கடி திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் இரவு நேரத்தில் எப்படி வரலாம் என்று அவர்களிடம் கேட்டனர்.
இதுபற்றி அவர்கள் சாமுவேலிடம் சென்று உங்கள் ஊர்க்காரர்கள் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம் என்று கோபத்துடன் விருந்து முடிந்தும், முடியாமலும் அவரவர் ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். தான் விருந்துக்கு அழைத்த நண்பர்களை இப்படி கேவலப்படுத்தி விட்டார்களே என்று சாமுவேல் ஆவேசப்பட்டார்.
இதையடுத்து நள்ளிரவு 11 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் சாமுவேல் கதிரேசன் உள்ளிட்ட 4 பேரைத் தேடிச் சென்றார். தைப்பூச ரோட்டில் நின்று கொண்டிருந்த அந்த 4 பேரும் சாமுவேல் கொலைவெறியுடன் வருவதைப் பார்த்தனர். உடனே கதிரேசனைத் தவிர மற்ற 3 பேர் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து கதிரேசனை அந்த கும்பல் குத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கதிரேசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி, அம்பை டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம், விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரகோமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைடுத்து சாமுவேல், அதே ஊரை சேர்ந்த ரீகன், ஜேக்கப், சவுந்தர், செல்வின், அகஸ்தியர் பட்டி சுப்பன் என்ற சுப்பிரமணியன், குரு, ரமேஷ், ரூபன், செல்வகுமார், ஆகிய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications