தமிழக நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என அனைத்து அண்டை மாநிலங்களும் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. விரைவில் தமிழக நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான போராட்டத்தை நடத்துவேன்.மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடவும் நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு உள்பட தமிழகத்தின் எந்தப் பிரச்சினையிலும் செயல்படாமல் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வருகிறார் என்று ஆவேசமாக கேட்டிருந்த விஜயகாந்த் நேற்று பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட புறப்பட்டபோது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
திருமண மண்டபத்தில் இருந்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எத்தனை அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.
முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, காவிரி பிரச்னை என எல்லா விவகாரங்களிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்தை கேரளம், கர்நாடகம் வடிகாலாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைகளுக்காக அடுத்த கட்டமாக விரைவில் புதுமையான போராட்டம் நடத்துவேன்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திறக்கும் மருத்துவமனையை பிரதமர் மன்மோகன் சிங் திறக்கச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கணித மேதை ராமானுஜன் விழாவில் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது.
ஆனால் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்ட மக்களும் இன்னும் வறுமையில்தான் வாடி வருகின்றனர். அங்க போய் அவர்களை பிரதமர் பார்த்து ஆறுதல் கூற வேண்டாமா?
ஆனால் இன்று அதிகாரப்பூர்வ விழாவுக்கு வருவது போலவந்து விட்டு, ப.சிதம்பரம் கூப்பிடுகிறார் என்றவுடன் அவரது விழாவுக்குப் பிரதமர் போவது நியாயமா?.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு கருணாநிதி ஆட்சி காலத்திலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கருணாநிதி அதை செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் பிரதமரைச் சந்திப்பதும் மனு கொடுப்பதும் என்று மாறிமாறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினால் நானும் அவர்களுடன் இணைந்து போராடத் தயாராக இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications