தாசில்தார் தற்கொலை: சிபிசிஐடி விசாரணை கோரி வருவாய் துறையினர் அமைச்சரை சந்திக்கிறார்கள்
நெல்லை: அம்பை தாசில்தார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வருவாய் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தற்கொலைக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி புதன்கிழமையன்று அமைச்சர், செயலரை சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாசில்தார் தியாகராஜன் கடந்த 23ம் தேதி நள்ளிரவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் டர்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளான தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது தற்கொலை சம்பவம் வருவாய் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் திங்கட்கிழமையன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் மாநில நிர்வாகிகளுடன் இணைந்து 29ம் தேதி தமிழக வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலர் ஆகியோரையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அதற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications