கிருஸ்துமஸ் விடுமுறை: சுற்றுலா பயணிகளால் திணறிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கிருஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதிலிருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.
பயணிகள் கூட்டம்
கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வாயில் என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காலை உணவு சாப்பிடுவதற்காக சுற்றுலா பயணிகள் காத்து கிடந்தனர். பல இடங்களில் வாகன நெருக்கடியும் காணப்பட்டது.
சூரிய உதயம் காண ஆர்வம்
சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் செவ்வாய்கிழமையன்று காலை சூரிய உதயம் பார்ப்பதற்காக திரிவேணி சங்கமத்தில் திரண்டிருந்தனர். ஆனால் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தங்கும் விடுதியில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வந்திருந்த லாக்கேஜ்களுடன் சாலை ஓரத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இன்னும் சுமார் 10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications