22 உயிர்களை காவு வாங்கி விட்டு 3 சிறுவர்களை அநாதைகளாக்கிய காலம்!
சென்னை: கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பழவேற்காடு சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தின் வாயிலுக்குச் சென்று உயிர் தப்பிய மூன்று சிறுவர்கள் மட்டும் மருத்துவமனை வளாகத்தில், தங்களுக்கே உரிய குழந்தைத்தனத்தோடு செல்போனில் கேம்ஸ் விளையாடி பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாண்டியன் ஓட்டல் அதிபர் சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அன்சாரி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற அவர்கள் அங்குள்ள தீவு ஒன்றில் மதிய உணவு உண்டுவிட்டு மாலையில் படகு மூலம் ஏரி பகுதிக்கு வந்துள்ளனர். முகத்துவாரத்தை தாண்டி படகு வந்தபோது ராட்சத அலை வந்துள்ளது. இதனால் படகு அங்கும் இங்கும் ஆடி ஒருபக்கம் சரிந்துள்ளது.
இதனால் சரிந்த இடத்தில் இருந்தவர்கள் படகின் மற்ற பகுதிக்கு ஒட்டுமொத்தமாக சென்றுள்ளனர். அப்போதுதான் படகு கவிழ்ந்துள்ளது. அந்த இடத்தில் தண்ணீர் ஆழமாக இருந்ததால் அனைவரும் மூழ்கியிருக்கிறார்கள். படகைப் பிடித்து தப்பிய 3 சிறுவர்கள் பேர் தவிர 22 பேர் உயிர் இழந்துவிட்டனர்.
கம்யூட்டர் விளையாட்டு
மரணத்தின் வாயிலுக்குச் சென்று உயிர் தப்பிய ஜனகராஜ், பால் தினகர், பவுன்ராஜ் ஆகிய மூவருமே 13 வயதை தாண்டாத பாலகர்கள். பெற்றோர், உறவினர்களின் மரணம் அவர்களை வெகுவாக தாக்கியுள்ளது. உறவினர்களின் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ள நிலையில் அந்த சிறுவர்கள் மருத்துவமனையின் சிறு அறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எப்பொழுது வீட்டிற்கு செல்வோம் என்பதே இப்போதைய அவர்களின் கேள்வி. வீடியோ கேம், மொபைல் கேம் போன்றவையே இந்த சிறுவர்களின் விளையாட்டு. வீட்டிற்கு சென்று தனது கம்யூட்டரில் கேம் விளையாட வேண்டும் என்று தனது அத்தையிடம் அந்த சிறுவர்கள் கூறியது கேட்டவர்களின் கண்களை கலங்கச் செய்தது.
மூன்று நாட்களாக வெறும் இட்லியா சாப்பிடுறது போரடிக்குது என்று அந்த சிறுவர்கள் அத்தையிடம் கூறினர். சிறுவர்களைச் சுற்றியும் அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
22 பேரின் உயிரை காவு வாங்கிய சோகம்
சிறுவர்கள் அனைவரும் கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தை மீண்டும் நினைவு கூர்ந்து பேசினர். கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்கு குயின்ஸ் லேண்டு போய் ஜாலியா விளையாடினோம். இந்த ஆண்டு அங்கு செல்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஆசீர்வாதம் மாமாவும், தங்கதுரை மாமாவும்தான் ஏரிக்குச் செல்லலாம் என்று கூறினார். அதனால்தான் திட்டத்தை மாற்றவேண்டியதாகிவிட்டது என்று கூறினர் அந்த சிறுவர்கள்.
போட் மூலம் ஏரிக்கு சென்றதை ஆர்வமாக விவரித்த அவர்கள், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்ததைப் பற்றி ஏனோ விவரிக்க முடியவில்லை.
கடைசியில் இதோ இதுதான் நான் போட்டிருப்பதுதான் கிருஸ்துமஸ் டிரஸ் என்று கூறினர் அந்த சிறுவர்கள். மகிழ்ச்சியாய் தொடங்கிய கிருஸ்துமஸ் பண்டிகை சுந்தரபாண்டியன் குடும்பத்திற்கு மட்டும் மரணத்தைப் பரிசளித்து சென்றுவிட்டது.












Click it and Unblock the Notifications