6 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த முகேஷ் - அனில் அம்பானிகள்!
கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து நின்ற சகோதரர்கள் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில்தான் இணைந்து பங்கேற்கிறார்கள்.
அம்பானி சகோதரர்களின் சொந்த ஊர் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள சோர்வாட். இங்குதான் திருபாய் அம்பானி பிறந்தார், வசித்தார். இங்கு அவர் வசித்த வீடு நினைவில்லமாக மாறியுள்ளது. அதேநேரம், திருபாய் அம்பானியும் அவர் மனைவியும் வசித்த அறை, சமையல் அறை போன்றவை அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
இங்கு நடந்த திருபாயின் 80 வது பிறந்த தின விழா நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதற்காக இருவரும் ஏற்கெனவே குடும்ப உறுப்பினர்களுடன் சோர்வாட் வந்துவிட்டனர்.
அவர்களின் வீட்டில் நடைபெற்ற வாஸ்து பூஜையில் ஒட்டுமொத்த குடும்பமும் பங்கேற்றது. முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். அவர்களின் மனைவிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
திருபாய் அம்பானியின் நினைவிடத்தை அவரது மனைவி கோகிலாபென் முன்னிலையில் அவர்களின் குடும்ப குரு ரமேஷ்பாய் ஓஜா நாளை திறந்துவைக்க உள்ளார்.