சென்னையில் டிசம்பர் 30ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்
மதுரை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அதனையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் 200 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, தமிழகத்துக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்க கோருதல், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை, ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறுவதால் சசிகலா ஆதரவாளர்கள் மனநிலையும், மற்ற அதிமுகவினர் மனநிலையும் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகின்றது. சசிகலா இல்லாமல் இந்த 2 கூட்டங்களும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.